சுதந்திர இந்தியாவில் தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசியது பத்திரிகைகள்தாம்.
பிரச்சினைகளைப் புறவயமாக அலசி ஆராய்ந்து தீர்வுகள் சொல்ல வேண்டியதுதான் பத்திரிகைகளின் பொறுப்பு.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகள் ஒருதலைச்சார்புடன் செயல்பட்டுவருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
*(உ-ம்)* வகுப்புவாத கலவரச் செய்திகளை எல்லாம் பத்திரிகைகள் பிரசுரிக்கும் விதம், அவற்றில் இடம்பெற்றுவரும் சொற்பிரயோகங்கள், வெளியிடப்படும் புகைப்படங்கள் எல்லாம் அவர்கள் பாரபட்சமாகச் செயல்பட்டு வருவதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.
முஸ்லிம்கள் சார்ந்த நிகழ்வுகளை வெளியிடும் செய்திகளில் எல்லாம் ‘தேசிய அவமதிப்பு’ என்ற கருவுக்குள் உள்ளடங்கும் ஏதோ சில கூறுகளை வலுக்கட்டாயமாகச் சொருகியிருப்பார்கள்.
முஸ்லிம் பெண்கள் அவதிக்கு உள்ளாவதை ஈவிரக்கமின்றிக் கேலி செய்யும் செய்திகளும் அவர்களின் அல்லல்களை மிகைப்படுத்திக்காட்டும் செய்திகளும் அதிக அளவில் வெளிவருகின்றன.
இன்னும் இஸ்லாமியக் கொள்கைகளுக்குத் துளியும் பொருத்தமில்லாத வகையில் ஆங்காங்கே தவறுதலாக நடக்கும் சிற்சில நிகழ்வுகள், விவகாரங்கள்கூட மிகப் பெரிய செய்திகளாகின்றன.
இந்தியச் சமூகப் படிநிலையில் கடைநிலை மக்கள்வரை ஊடுருவி நிலைத்திருக்கும் ‘முஸ்லிம்-விரோத’ கடும்போக்குவாதத்தைக் களைந்து முஸ்லிம்களின் ஆக்கபூர்வ பணிகளுக்கும் பங்களிப்புகளுக்கும் தியாகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்வண்ணம் செய்திகள் வெளிவருவதில்லை.
இந்நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) நடத்தப்பட்ட தேசிய, மாநில அளவிலான ஆய்வரங்குகளில், Social Responsibility of the Media எனும் தலைப்பில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் செம்மையாக்கப்பட்ட, கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
நூலில் இடம்பெற்றுள்ள ‘ஊடகவியலாளர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி’ எனும் இறுதி அத்தியாயம் ஹெச்.ஹெச்.எம் பழீல் (நளீமி) எழுதிய, ‘இஸ்லாமும் தொடர்பு சாதனங்களும்’ எனும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
அனைத்து சாராருக்கும் ஓர் அவசிய வாசிப்பு!
Write a Review