இதுதான் குர்ஆன்
நூல் அறிமுகம்:
சுமார் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரேபிய தீபகர்பத்தில் வாழ்ந்த மக்கள் மனித வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்து, எந்த விதமான கட்டுப்பாடும், சட்ட ஒழுங்கும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தனர், உலகம் முழுக்க படைத்தவனைப் பற்றிய அறியாமை என்னும் காரிருளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. அந்த நிலையில் அவர்களுக்கு நேர்வழிகாட்டியாக அனுப்பப்பட்ட இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறிதான் திருக்குர்ஆன்.
எல்லா மக்களிடத்திலும் அறியப்பட்ட ஒன்றுதான் “குர்ஆன்” அது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டும் உள்ளது என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரையில் குர்ஆன் தங்களுக்கு மட்டும் சொந்தமானது என கருதக்கூடியவர்களும் அவர்களில் நிறைய இருக்கிறார்கள். அதனால் குர்ஆனை மற்றவர்களுக்கு கொடுக்க தயங்குகிறார்கள். ஆனால் குர்ஆன் இறைவனின் வேதம். இறைவனால் படைக்கப்பட்ட அத்தனைபேர்களுக்கும் அது நேர்வழி காட்டியாக இருக்கிறது மட்டுமில்லை. அதை எல்லோரும் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது இறைவனின் கட்டளை.
இந்த உண்மையை சமூகப் பாகுபாடின்றி எல்லா மக்களுக்கும் உணர்த்தவேண்டும் என்ற நன்னோக்குடன் இந்த சிறிய புத்தகத்தைத் தொகுத்துள்ளேன். குர்ஆனின் உள்ளடக்கத்தை முக்கிய தலைப்புகளில் இடம்பெறச்செய்து அதன் கீழ் அது சம்பந்தப்பட்ட ஒரு சில வசனங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். இதன் மூலம் முஸ்லிம்களும் மாற்று மத சகோதரர்களும் திருக்குர்ஆனில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது? அதனுடைய சாராம்சம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். எனவே, “இதுதான் குர்ஆன்” என்று தலைப்பிட்டு இதைத் தொகுத்துள்ளேன். குர்ஆன் வசனங்களை முழுமையாகவும், சில இடங்களில் சுருக்கமாகவும் குறிப்பிட்டுள்ளேன். மாற்று மதத்தவர்களுக்கு குர்ஆனின் மொத்த மொழிபெயர்ப்பையும் கொடுப்பதற்கு முன் இந்த சிற்றேடை முதல் கட்டமாகக் கொடுப்பது சிறந்தது.
இதற்கு முன்னர் “இவன்தான் அல்லாஹ்” என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகத்தை எழுதினேன். அது மக்களிடையில் பெரிய வரவேற்ப்பைப் பெற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக மாற்று மத சகோதரர்கள் பெரிதும் பயனடைகின்றனர். அதே போல் இந்த புத்தகமும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றேன். இதை எழுதுவதற்கான அறிவையும் ஆற்றலையும் இதை வெளியிடுவதற்கான எண்ணத்தையும் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களுடைய மேலான கருத்துக்களையும், இந்த புத்தகத்தின் தேவையையும் நமக்குத் தெரிவிப்பீர்களானால் தக்க வழி காட்டுதல் வழங்கப்படும்.
Reviews
There are no reviews yet.